முகவாத நோய்க்கு சித்த மருத்துவம்
குளிர் காலத்தில் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் ஆகியவை ஏற்படுவது சகஜம். ஆனால் எவ்வித தடுப்பும் இல்லாமல் பனியில், குளிரில் இருப்பவர்களுக்கு முகவாதம் என்னும் நோய் தாக்குகிறது. காது, மூக்கு வழியே செல்லும் குளிர் காற்று முகத்துக்கு செல்லும் ரத்தநாளங்களை தாக்குவதால் முகம் கோணலாகும்! ஏழாவது முக நரம்பு பாதிப்பினால் இந்த பாதிப்பு உண்டாகிறது.
இதற்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் ஒரு காரணம். இந்த நோய்க்கு `பெல்ஸ் பாஸ்சி'- முகவாதம் என்று பெயர். ஆண்களைவிட பெண்களை இந்த நோய் அதிகம் தாக்கும்!
பிறவியிலேயே அல்லது குளிர்காலத் தாக்குதலால் முகம் கோணல் ஆகும்போது அதை சித்த மருத்துவத்தில் முழுமையாக குணப்படுத்த மருந்துகள் உள்ளன.
* மாவிலங்கு மரப்பட்டை - 20 கிராம்
* மூக்கிரட்டைப் பட்டை வேர் - 20 கிராம்
* வெள்ளைச் சாரணை வேர் - 20 கிராம்
ஆகிய மூன்றையும் நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் `நண்டுகல் பற்பம்' சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும்.
அதேபோல், சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை `தோள்பட்டை உறைவு'. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பற்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.
- டாக்டர் சோமசுந்தரம், சென்னை.