
இந்த மின்காந்த அலைகளின் அலைநீளத்தைப் பொறுத்து இவற்றின் தன்மை மாறுபடும். அவ்வாறு மாறுபட்ட தன்மைகள் பலவிதமாக வெளிப்படுகின்றன. அவை, ரேடியோ அலைகள், மைக்ரோ அலைகள், ஒளி அலைகள், அகச்சிவப்புக் கதிர்கள், புறஊதாக் கதிர்கள், எக்ஸ் கதிர் மற்றும் காமா கதிர் ஆகும்.
ஒரு கடத்தியில் (கண்டக்டர்) மின்சாரம் பாயும்போது, அதைச் சுற்றி காந்தப் படலம் உண்டாகிறது என்று கண்டறிந்தார்கள். அதற்கு எதிர்மறையாக ஒரு மாறுகின்ற காந்தப் படலத்தைச் சுற்றியுள்ள ஒரு கடத்தியின் வழியாக மின்சாரம் பாய்கிறது என்று மைக்கேல் பாரடே கண்டுபிடித்தார்.
மாறுகின்ற மின்னோட்டம் ஒரு மின்காநத அலையை உருவாக்குகிறது என்று 1873-ல் மேக்ஸ்வெல் கண்டறிந்தார். அது வெளிப்புறமாக, ஒளியின் வேகத்தில் பாய்கிறது. நம் கண்ணுக்குத் தெரியும் ஒளியே ஒருவித மின்காந்த அலைதான். அந்த ஒளி அலையானது, மின்காந்த அலைவரிசையில் மிகச் சிறிய பாகத்தையே கொண்டிருக்கிறது. மேக்ஸ்வெல்லின் கொள்கைகள் இன்றும் உபயோகத்தில் உள்ளன.
மேக்ஸ்வெல்லின் கோட்பாடு, விண்வெளியியலில் மிக முக்கியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், பூமியில் மட்டுமல்லாது, பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருட்களில் இருந்தும் மின்காந்த அலைகள் உற்பத்தியாகின்றன என்று தெரியவந்தபோது, அவற்றைப் பற்றிய நிறைய விஷயங்களை இன்னும் ணுக்கமாக ஆராய்வது மேலும் எளிதானது.
மிக அதிக அலை நீளம் உள்ள மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை, இரண்டு அடியிலிருந்து 10 கி.மீ. வரை அலைநீளம் கொண்டதாக இருக்கும். இவை மூன்றடிக்குக் கீழே இருந்தால் `மைக்ரோ அலைகள்' எனப்படுகின்றன. ரேடியோ அலைகள் மைக்ரோ அலைகளை விட அலைநீளத்தில் குறைந்திருந்தால் அவை அகச்சிவப்புக் கதிர்கள் எனப்படுகின்றன. அவற்றைக் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் அவற்றின் வெப்பத்தை உணர முடியும்.